Tamilவிளையாட்டு

உலக ஜூனியர் பேட்மிண்டன் – இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழக வீரர்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடைபெறுகிறது. ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டி ஒன்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி, உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பனிட்சாபோன் தீரரட்சகுலுடன் மோதினார்.

இதில் 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சங்கர் முத்துசாமி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இந்த வெற்றியின் மூலம், 2016க்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற பெருமையை சங்கர் முத்துசாமி பெற்றார்.

முன்னதாக கடந்த 2008 ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.