Tamilசெய்திகள்

உலக அளவில் 76 கோடி பேர் கொரோனாவால் பாதித்திருக்கலாம் – உலக சுகாதார அமைப்பு தகவல்

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு இது வரை 3½ கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் 10 லட்சத்து 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஆனால் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளதை விட அதிகளவு இருக்கும் என்று தெரிவிரிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி சரியாக கணக்கெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் சிறப்பு செயற் குழு கூட்டத்தில் அந்த அமைப்பின் அவசர நிலை பிரிவு தலைவர் மைக்கேல் ரியான் கூறியதாவது:-

கிராமம் முதல் நகர் புறம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வேறு பாடுகள் உள்ளன. உலகில் பெரும் பகுதிகள் அபாயத்தில் இருப்பதே இதன் அர்த்தமாகும். கொரோனா தொற்று தொடர்ந்து விரிவடையும் ஆனாலும் அந்த தொற்றின் பரவலை கட்டுப்படுத்தவும் உயிர்களை காக்கவும் பல வழிகள் உள்ளன. இதுவரை பலர் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும். தற்போதைய மதிப்பீட்டின் படி உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது.

தெற்காசியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐரோப்பியா, கிழக்கு தரைகடல் பகுதியில் தொற்றால் உயிரிழப்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் ஆப்பிரிகாவிலும் மேற்கு பசிபிக் பகுதியில் நல்ல சூழல் நிழவுகிறது.

தற்போது உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்றார்.

உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி உலக மக்கள் தொகையில் 76 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.