Tamilசினிமா

உலகத்திரைப்படமாகும் பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்’

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் கதைக்களத்தில் நடக்கும் படப்பிடிப்பு இன்னும் 3 வாரங்களில் முடிவடையவுள்ளதாகவும் அடுத்த 15 நாட்கள் ஷெட்யூலில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், ‘தங்கலான்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பேசியதாவது, “தங்கலான் உலக திரைப்படம். இப்படத்தை எவ்வளவு மொழிகளில் மொழிப்பெயர்க்க முடியுமோ அத்தனை மொழிகளிலும் மொழிப்பெயர்ப்போம். இந்த படத்தை பார்க்காத மக்களே இல்லை என்ற அளவிற்கு பல மொழிகளில் டப் செய்யவுள்ளோம்” என்று பேசினார்.