Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் – புதிய சாதனை நிகழ்த்திய ரோகித் சர்மா

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த உலக கோப்பையில் ரோகித் சர்மாவின் 5-வது சதம் இதுவாகும்.

ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 122 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 102 ரன்களும், வங்காளதேசத்துக்கு எதிராக 104 ரன்களும் எடுத்து இருந்தார். இதன்மூலம் உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

இதற்கு முன் 2015-ம்ஆண்டு உலக கோப்பையில் இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை ரோகித் சர்மா முறியடித்தார்.

மேலும், 44 ஆண்டு கால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மொத்தத்தில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 6 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். அந்த சாதனையையும் ரோகித் சர்மா சமன் செய்தார். ரோகித் சர்மா கடந்த உலக கோப்பை போட்டியில் ஒரு சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு உலகக் கோப்பை போட்டி தொடரில் ரோகித் சர்மா 8 ஆட்டத்தில் விளையாடி 647 ரன்கள் சேர்த்து ரன் குவிப்பில் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறார். வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (8 ஆட்டத்தில் 606 ரன்கள்) 2-வது இடத்தில் உள்ளார்.

2003-ம் ஆண்டு உலக கோப்பையில் தெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்ததே ஒரு உலக கோப்பையில் வீரர் ஒருவரின் அதிகபட்சமாகும். அந்த அரிய சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு இன்னும் 27 ரன்களே தேவையாகும்.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க விக்கெட்டுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா-லோகேஷ் ராகுல் ஜோடி 189 ரன்கள் சேர்த்தது. உலக கோப்பை போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு இந்திய இணை எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *