உன்னாவ் பெண் விபத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – அகிலேஷ் யாதாவ் வலியுறுத்தல்

உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

அதன்பின்னர் இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதற்காக நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன் அப்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று அந்த பெண், தனது தாய், வழக்கறிஞர், மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் வந்த கார் மீது லாரி மோதியது. இதில் அவரது தாய், உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், எம்.பியுமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இதனை மக்களவையில் நான் எழுப்புவேன். மாநிலங்களவை உறுப்பினர்களும் இதனை எழுப்புவார்கள்.

பாஜக ஆளும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் குற்றவாளிகள் பயமின்றி திரிகின்றனர். இதற்கு சிபிஐயினால் மட்டுமே தீர்வு காண முடியும். இந்த சம்பவம் கொலை முயற்சியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது’ என கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools