Tamilசெய்திகள்

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் – 300 உக்ரைன் வீரர்கள் பலி

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் 5 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்குள்ள நகரங்கள் மீது தொடர்ந்து ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் டொனட்ஸ்க் மாகாணம் கிராமடோர்ஸ்கி நகரில் உள்ள ஒரு பள்ளியில் உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்கி இருந்தனர். அந்த பள்ளி மீது ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 300 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்து உள்ளது. பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உக்ரைன் உறுதிப்படுத்திய வேளையில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தது.

300 வீரர்கள் பலியானதாக ரஷிய ராணுவம் கூறியதற்கு உக்ரைன் தரப்பு விளக்கம் அளிக்கவில்லை. இதற்கிடையே உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ்வில் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இதில் 3 பேர் பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மேலும் ஆயுத உதவிகளை வழங்குகின்றன. உக்ரைன் ராணுவத்துக்கு ஏவுகணைகள், டிரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை அமெரிக்க வழங்க உள்ளது. அதே போல் உக்ரைனுக்கு மேலும் 100 டிரோன்களையும், பீரங்கி தடுப்பு ஆயுதங்களையும் இங்கிலாந்து அனுப்பி வைத்துள்ளது.