Tamilசெய்திகள்

உக்ரைன் மீது போர் தொடுக்க தயாராக இருக்கும் ரஷ்யா – செயற்கைகோள் புகைப்படத்தால் பரபரப்பு

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும், அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

ஆனாலும், ரஷ்யா எந்நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் உக்ரைனில் இருந்து உடனே வெளியேறும்படி தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

இந்த நெருக்கடி குறித்து விவாதிக்க 48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ரஷ்யாவுக்கு கெடு விதித்துள்ள உக்ரைன், இதில் பங்கேற்க ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளையும் உக்ரைன் அழைத்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுமார் 1 மணி நேரம் உரையாடினார். அப்போது அமெரிக்காவின் ஆதரவை ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், பெலாரஸ், கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யாவில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளதைப் புதிதாக வெளியாகியுள்ள செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக காட்டுகிறது.

மாக்சர் வெளியிட்டுள்ள இந்த செயற்கைக்கோள் படங்களில் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

கிரிமியா அருகிலுள்ள விமானநிலையத்தில் அதிகளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதும் தெரிகிறது. இந்த விமானநிலையம் அருகே 500-க்கும் மேற்பட்ட ராணுவ கூடாரங்கள் காணப்படுகிறது.

எல்லையில் அமைந்துள்ள நூவூஜெர்னோய் என்ற இடத்தில் ராணுவ பயிற்சி நடவடிக்கைகளும் காணப்படுகிறது. பெல்லாரஸ் பகுதியிலும் இதே நிலை தான்.

உக்ரைனில் இருந்து 25 கி.மீ. முதல் 45 கி.மீ. வரை ராணுவத்தைக் குவித்துவருகிறது. இவை அனைத்தையும் காட்டிலும் மேற்கு ரஷ்யாவிலும் அதிகப்படியான ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.