Tamilசெய்திகள்

உக்ரைனில் இருந்து மீட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாட்டில் சிக்கி தவித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை மத்திய அரசு மீட்டது.

இந்த மாணவர்களின் மருத்துவபடிப்பு குறித்த எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

இந்த நிலையில் உக்ரைன் பல்கலைக்கழகத்தில் இருந்து நாடு திரும்பும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு ரஷிய பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

கூடுதல் கட்டணம் இல்லாமலும், நுழைவு தேர்வு இல்லாமலும் மாணவர்கள் ரஷிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா மற்றும் கிரிமியாவில் உள்ள நிறுவனங்கள் உக்ரைனில் இருந்த வெளிநாட்டு மருத்துவ ஆர்வலர்களையும், இந்தியாவை தளமாக கொண்ட ஆலோசகர்களையும் அணுகி தங்களது கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கும் பணியை தொடங்கியுள்ளன.

கஜகஸ்தான், ஜார்ஜியா, ஆர்மேனியா, பெலாரஸ், போலந்து ஆகிய நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே இதே மாதிரி இடமாற்றத்திற்கான உதவிகளை அளித்துள்ளன.

மீட்பு நடவடிக்கையின் போது 140 இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்கு பதிலாக மால்டோவா சென்று சிசினாவில் உள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் நிகோலே டெஸ்டெமிடனு ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆப் மெடிசின் அண்ட் பார்மசியில் (எஸ்.யூ.எம்.பி.) நேரடியாக அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அந்த கல்வி நிறுவனத்தின் சர்வதேச பிரதிநிதி டாக்டர் கொர்னேலியா ருடோஸ் கூறியதாவது:-

கடந்த வாரம் வரை உக்ரைனில் இருந்து 140 இந்தியர்கள் நேரடியாக வந்தனர். அவர்களை எங்கள் பல்கலைக்கழகத்தில் சேர்த்துள்ளோம்.

நட்பின் அடையாளமாக இந்த செமஸ்டருக்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம்.

செப்டம்பர் முதல் கட்டணத்தை மட்டுமே தொடங்குவோம். எங்களிடம் அதிக வசதிகள் இருக்கிறது. முதல், இரண்டாம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களை ஒரே ஆண்டிற்கு அழைத்து செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். இதனால் நேரம் இழப்பு ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.