Tamilசெய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க நிலைப்பாடு குறித்து 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் – அண்ணாமலை அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக சார்பில் ஈ.பி.எஸ் அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி போட்டியிடுகிறது.

போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவிக்கப்பட்டது. ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவின் ஆதரவை கோரினர். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியே அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.

இதையடுத்து, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் சந்திப்பு குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேசியதாவது:-

தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராகவே உள்ளனர். திமுகவுக்கு எதிராகவே அதிமுக உருவானது. திமுகவை எதிர்க்க ஒருங்கிணைந்த அதிமுக, பாஜகவே தேவை. பாஜக நிலைப்பாடு குறித்து தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் கருத்தை இரு தலைவர்களிடம் எடுத்து கூறினோம்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வலியுறுத்தினோம். ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்தால் தான் திமுகவை எதிர் கொள்ள முடியும். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து வரும் 7ம் தேதிக்குள் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.