Tamilசெய்திகள்

இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. 2 ரக ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது.

இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோ மீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இதனுடைய இறுதிகட்ட பணியான கவுண்ட்டவுன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.