இவர்கள் உங்கள் குடும்பம் தானா? – பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்

பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என பொதுக்கூட்டத்தில் பேசும்போது விமர்சனம் செய்திருந்தார். இதனையொட்டி பா.ஜனதா தலைவர்கள் மோடியின் குடும்பம் என எக்ஸ் தளத்தில் தங்களது பெயருக்கு பின் குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகரான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் “டியர் சுப்ரீம் லீடர் (பிரதமர் மோடி) மணிப்பூர், விவசாயிகள், வேலைவாய்ப்பின்மை ஆகிய மக்கள் உங்களுடைய குடும்பதைச் சேர்ந்தவர்கள் தானா?” எனக் கேட்டுள்ளார்.

பிரகாஷ் ராஜ் பா.ஜனதாவின் கருத்துக்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் மோடி குடும்பம் என பா.ஜனதா தலைவர்களில் கூறி வரும் நிலையில், பிரகாஷ் ராஜ் இவ்வாறு கேட்டுள்ளார்.

நேற்று சென்னையில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் என்னை திட்ட, வசைப்பாட ஒரு புதிய திட்டத்தை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த மோடிக்கு குடும்பம் கிடையாது. அதனால்தான் இப்படி பேசுகிறார் என்று கூறுகிறார்கள். என் உயிரினும் மேலான குடும்பங்களே, எனக்கு 16 வயதாகும்போது நான் என் வீட்டை துறந்து வெளியேறினேன். இந்த தேசத்திற்காக நான் வெளியேறினேன்.

நீங்கள்தான் என் குடும்பம். பாரத நாட்டின் மக்கள்தான் என்னுடைய குடும்பத்தார். தேசத்தின் இளைஞர்கள் என் குடும்பத்து மக்கள். ஆகையால்தான் அவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்க இரவு, பகலாக கடுமையாக உழைத்து வருகிறேன்.

யாருமே இல்லாதவர்கள், நிர்கதியாக நிற்பவர்கள், அனாதைகள் அனைவருக்கும் இந்த மோடி சொந்தமானவன். என்னுடைய பாரதமே என்னுடைய குடும்பம்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools