Tamilசெய்திகள்

இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் – முன்னாள் அதிபர் சிறிசேனா வலியுறுத்தல்

இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என பொதுமக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்த மகிந்த ராஜபக்சே தான் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என அந்நாட்டு முன்னாள் அதிபரான மைத்ரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பொலனருவா பகுதியில் நடைபெற்ற மே தின விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சிக்கலில் இருந்து மீள்வதற்கு மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.