Tamilசெய்திகள்

இரவு-பகலாக மெரினா கடற்கரையில் கண்காணிக்கும் போலீஸ்!

ஆன்லைனிலேயே தொடர்ந்து தேர்வுகளை நடத்தக்கோரி மதுரையில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

இதைதொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. ஆனால் இனி ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறாது என்றும், நேரடியாகவே தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும் மாணவர்கள் ஆன்லைனிலேயே தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல் பரவியது. இதைதொடர்ந்து அங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு திரண்டதை போன்று ஆன்லைன் தேர்வை வலியுறுத்தியும் மாணவர்கள் அதிகளவில் கூடிவிடக்கூடாது என்பதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் மெரினா கடற்கரை பகுதியில் குவிக்கப்பட்டனர்.

சமூக வலைதளங்களிலும் மாணவர்கள் போராட்டம் தொடர்பான தகவல்களை பரப்பினார்கள். இதனை கருத்தில் கொண்டு மெரினாவில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்து அனுப்பினார்கள்.

மாணவர்கள் யாரும் கூட்டமாக கூடிவிடக்கூடாது என்பதற்காக மெரினா சர்வீஸ் சாலையில் தடுப்புகளை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் மாணவர்கள் போராட்டத்துக்கு வரப்போவது இல்லை என்ற தகவல் பரவியது. இருப்பினும் போலீசார் இரவிலும் கண்காணித்தனர்.

இன்று 2-வது நாளாகவும் மெரினா கடற்கரையில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அண்ணாசதுக்கம், ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரையில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடற்கரை மணல் பரப்பிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.