இரண்டாவது பெண் குழந்தை பிறந்தால் மத்திய அரசு திட்டத்தில் சலுகை

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டுமுதல் செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தாய் மார்களுக்கு பிரசவ உதவி வழங்கப்படுகிறது. 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் முதல் பிரசவத்துக்கு இத்திட்டத்தின் கீழ் பேறுகால உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் செயல்படுத்துகிறது.

கர்ப்பிணிகள் மற்றும் முதல் குழந்தை பெற்றெடுத்த பாலூட்டும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகையை பெறலாம்.

இந்த நிலையில் தாய்மார்களுக்கான இந்த திட்டத்தில் மேலும் சலுகை வழங்கப்பட இருக்கிறது. அதன்படி 2-வதாக பெண் குழந்தை பிறந்தால் அந்த தாய்மார்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் குழந்தைக்கான உதவித்தொகை 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. தற்போது திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ் செயல்முறை எளிமைபடுத்தப்பட்டு 2 தவணைகளாக பணம் வழங்கப்படும்.

2-வதாக பெண் குழந்தை பிறந்தால் முழுத்தொகையும் பயனாளிக்கு குழந்தை பிறந்த பின்னரே வழங்கப்படும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools