Tamilவிளையாட்டு

இரட்டை பதவி விவகாரம் – ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ்

பெங்களூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் டிராவிட் துணை தலைவர் பதவியில் இருந்து வருகிறார். எனவே அவரை தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக நியமித்தது இரட்டை ஆதாய பதவி வகிக்கும் பிரச்சினையாகும் என்று மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் டிராவிட்டிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு டிராவிட் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார்.

அதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் நீண்ட விடுப்பில் இருக்கிறேன் என்றும் தனக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் மீண்டும் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில் வருகிற 12-ந் தேதி டெல்லியில் நேரில் ஆஜராகி மேலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *