இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் ‘அருவி’ மதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

அரும்புமீசை குறும்புபார்வை, வெண்ணிலாவீடு, விசிறி  போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிவீரன்  மகாலிங்கம். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஒன்று, முன்னணி நிறுவனம் தயாரிக்க ‘விடுதலை’ நாயகன் சூரி  ஹீரோவாக நடிக்கும் படம். இந்தப் படத்திற்கு கதை-திரைக்கதை எழுதியிருக்கும் வெற்றிவீரன் மகாலிங்கம், ‘அருவி’ மதனை ஹீரோவாக வைத்து ஒரு  படத்தை இயக்குகிறார்.

இந்த இரண்டு படங்கள் குறித்து இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம் கூறுகையில், “சூரியும் நானும் பால்யகால  நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ரகளையா ஒரு கதை பண்ணினோம்.பட்ஜெட் பெரிசு. விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பு வரும்.

‘விடுதலை’ படத்தில் ஒப்பந்தம் ஆனதிலிருந்து ஒரு விசயத்தைச் சொல்லிகிட்டே இருப்பார். அதாவது, “காமெடியனா என்னை ஏத்துக்கிட்ட மக்கள், இப்போ கதையின் நாயகனா நடிக்கிறத எப்படி.  ஏத்துக்கப் போராங்கன்றத  நெனச்சாத் தான் கொஞ்சம் பயமா இருக்கு நண்பா” ன்னு சொல்லிகிட்டே இருப்பார். இப்போ, விடுதலை ட்ரெய்லர் வந்த பிறகு கிடைக்கிற ரெஸ்பான்ஸைப் பார்கிறப்போ மகிழ்ச்சியா இருக்கு. வெற்றிமாறன் சாரோட உழைப்பு அபாரமானது. சூரியின் அடுத்த படத்தில் நான் கதை திரைக்கதை  எழுதி இருப்பது ஒரு நண்பனாக இரட்டிப்பு மகிழ்ச்சி.

தெளிவான பார்வையுடன் சொல்லப்பட்ட கதை ஒரு மாபெரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் படமாக்கத் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தனது அடுத்த கட்ட பயணத்திற்கான பாதை சரியானது தான் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

மேலும், சகுந்தலா டாக்கீஸ் நிறுவம் வழங்க, என்னுடைய மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறேன்.

அருவி, கர்ணன், கொரில்லா மற்றும் 30-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தற்சமயம் துணிவு, அயலி (வெப்  தொடர்), அயோத்தி போன்ற வெற்றி படைப்புகள் வழியாக மக்களின் ஆதரவை பெற்று வரும்  ‘அருவி’ மதன்  கதாநாயகனாக நடிக்கும்  முதல் படம் இதுவாகும். பல முன்னணி நடிகர்கள் நடிக்க, ஒரேகட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறேன்.

நான் ஏற்கெனவே இயக்கிய மூன்று படங்கள் மூலம் சில அனுபவங்களைப் பெற்றுள்ளேன், அந்த அனுபவத்தின் துணையோடு நல்ல சினிமாவை மக்கள் கொண்டடியே தீருவார்கள் என்ற முழு நம்பிக்கையுடனும், புது வெளிச்சத்தோடும் இப்போது களத்திற்கு வந்திருக்கிறேன்.

இது முழுக்க முழுக்க நகரம் சார்ந்த பின்னணிக் கதை. எனது அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் சுவாரசியமான  உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையை உருவாகியிருக்கிறேன். 20 நாட்களில் முழு படத்தையும் முடிக்கும் திட்டத்துடன் பணியை தொடங்கியிருக்கிறேன்.” என்றார்.

கதையின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிப்பில் முத்திரை பதித்த நட்சத்திரங்களைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம் இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம், மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools