Tamilசினிமா

இயக்குநர் ராஜமவுலியின் தந்தை கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத்துக்கு கொரோனா பாதிப்பு

தெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதி பிரபலமானார். தற்போது கங்கனா ரணாவத் நடிப்பில் தயாராகி உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்துக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.

விஜய்யின் மெர்சல் படத்துக்கும் திரைக்கதை எழுதி இருந்தார். கங்கனா ரணாவத் நடிப்பில் வந்த ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை கதையான மணிகர்ணிகா, தெலுங்கில் வெற்றி பெற்ற மகதீரா, எமதுங்கா, சத்ரபதி உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.

விஜயேந்திர பிரசாத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.