Tamilசினிமா

இயக்குநர் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணையும் வடிவேலு

2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும் இப்படம் தனுஷின் முந்தைய படங்களை விட அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டணியில் நடிகர் வடிவேலு இணையவுள்ளதாகவும் இது குறித்து படக்குழு வடிவேலுவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது உறுதியாகும் பட்சத்தில் தனுஷ் உடன் வடிவேலு முதல் முறையாக இணையவுள்ளார். இதற்கு முன்பு தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் சில நாட்கள் வடிவேலு நடித்த நிலையில் பின்னர் அவர் அந்த படத்தில் இருந்து விலகி, விவேக் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.