Tamilசினிமா

இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது

பிரபல சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு கடந்த 2016-ம் ஆண்டு பேட்டி அளித்தனர். அப்போது, பைனான்சியர் முகுந்த் சந்த போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார்.

அவர் இறந்த பின்னர், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.செல்வமணி, அருள் அன்பரசு ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்கள் இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்து விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.