Tamilவிளையாட்டு

இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்

ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதியில் தோல்வி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இன்று ஆடவருக்கான மல்யுத்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், 86 கிலோ எடைப்பிரிவிருக்கான காலிறுதி போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா,  6-3 என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தினார்.

அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்க வீரர் டேவிட் டெய்லரை எதிர்கொண்டார் தீபக் புனியா. ஆனால் அரையிறுதி ஆட்டம் அவருக்கு கடும் சவாலாக இருந்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே அமெரிக்க வீரரை எதிர்கொள்ள முடியாமல் தீபக் புனியா திணறினார்.

அவரை ஒரு புள்ளிகள் கூட எடுக்க விடாமல் அமெரிக்க வீரர் தாக்குதல் தொடுத்தார். இறுதியில், தீபக் புனியா 0-10 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்.
—————-
ஒலிம்பிக் மல்யுத்தம் – இந்திய வீரர் ரவிக்குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா.

அரையிறுதியில் வென்றதன் மூலம் இந்திய வீரர் ரவிக்குமாருக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும், மகளிருக்கான குத்துச்சண்டையில்  லாவ்லினா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

————

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சனை – இந்திய வீராங்கனை லாவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லாவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும் வென்றுள்ளனர். மூன்றாவதாக லாவ்லினா பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

—–

ஒலிம்பிக் மகளிர் ஆக்கி – அரையிறுதியில் இந்திய அணி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஆக்கி அணி, முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. அதன்பின்னர் அடுத்தடுத்து 2 வெற்றிகளை பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்தது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை இந்தியா எதிர்கொண்டது. கடைசிவரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 1-2 என தோல்வியடைந்தது.

ஆட்டத்தின் துவக்கத்தில் இரு அணி வீராங்கனைகளும் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலையில் இருந்தன. அதன்பின்னர் ஆஸ்திரேலியா தரப்பில் 36வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை மரியா கோலாக்கினார். இதற்கு பதிலடி கொடுத்து சமன் செய்வதற்காக இந்திய வீராங்கனைகள் கடுமையாக போராடினர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.

எனினும், இந்தியாவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை நாளை மறுநாள் எதிர்கொள்கிறது.