Tamilசெய்திகள்

இன்று அத்திவரதர் தரிசனத்திற்கு 8 மணி நேரம் தடை

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.

நேற்று அத்திவரதர் ரோஸ் நிற பட்டாடையில் தாமரை மலர்கள், எலுமிச்சம் மாலை மற்றும் வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வருகிற 16-ந்தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

வருகிற 17-ந்தேதி மந்திரங்கள் ஓதப்பட்டு அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக வைக்கப்படும். கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்திவரதரை எடுத்து செல்ல மூங்கில் பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) ஆடி கருடசேவையையொட்டி நண்பகல் 12 மணிக்கு அத்திவரதர் தரிசனத்திற்கான கிழக்கு கோபுர வாயில் மூடப்படும். முக்கிய நபர்களுக்கான தரிசன வாயிலும் 12 மணிக்கு அடைக்கப்படும். உள்ளே சென்ற பக்தர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேற வேண்டும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை கருடசேவை விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடர்ந்து நடைபெறும். நாளை (வெள்ளிக்கிழமை) முக்கிய நபர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படும்.

பொது தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 17-ந்தேதி அனைத்து தரிசனமும் முழுமையாக ரத்து செய்யப்படும். இதுவரை அத்திவரதரை 85 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அத்திவரதரை குளத்தில் வைக்க அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 17-ந்தேதி மாலை ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *