Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம் – குழப்பத்தில் பிசிசிஐ

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து வேறு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்த பதவிக்கு முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளரை விரும்புவதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ரிக்கி பாண்டிங் அல்லது ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் பெயரில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், விரேந்தர சேவாக் என்ற பெயர்களில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளது.

மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் எது உண்மையான விண்ணப்பம் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூகுள் ஃபார்ம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் அதிகளவில் போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.