Tamilவிளையாட்டு

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன் – தினேஷ் கார்த்திக்

மும்பையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில் ஆட்ட நாயகன் விருது தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட பின்னர் அவர் பேசியதாவது:

எனக்கு ஒரு பெரிய குறிக்கோள் உள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே எனது
நோக்கம். இது எனது பயணத்தின் ஒரு பகுதி. நான் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்.

ஷாபாஸ் ஒரு சிறந்த வீரர், அவர் சிறப்பாக செயல்படுவார். அவர் சவாலுக்கு தயாராக இருக்கிறார். அவரால் நீண்ட தூரம் பந்தை அடிக்க முடியும். இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார்.

இந்நிலையில் பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் தினேஷ் கார்த்திக்கை பாராட்டி உள்ளார். தற்போது அவர் விளையாடும் விதம் இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக இருக்கிறது. அவர்
மிகவும் தெளிவாகவும், அமைதியுடனும் இருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.