Tamilவிளையாட்டு

இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி டெஸ்ட் கிரிக்கெட் – நாளை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. பெங்களூரில் நடந்த இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்திலும், 2- வது போட்டியில் 4 ரன்னிலும், கடைசி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஜூலை 1- ந் தேதி வரை இந்தப் போட்டி 4 நாட்கள் நடக்கிறது.

மந்தனா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியை ரசிகர்கள் இலவசமாக காணலாம். ‘சி, டி, இ’, மற்றும் ‘ஐ,ஜே’, ‘கே’ கேலரிகளின் கீழ் அளவில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் ஜூலை 5, 7 மற்றும் 9-ந் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.