Tamilவிளையாட்டு

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி – இன்று இந்தூரில் நடைபெறுகிறது

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் வரிசையாக தோற்ற தென்ஆப்பிரிக்கா தொடரையும் இழந்து விட்டது.

இந்நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 106 ரன்களில் சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்த இந்தியா, 2-வது ஆட்டத்தில் 237 ரன்கள் குவித்த போதிலும் போராடி தான் வெற்றிபெற முடிந்தது.

டேவிட் மில்லரின் தடாலடியான சதத்தால் தென்ஆப்பிரிக்கா 221 ரன்கள் வரை நெருங்கி வந்து அச்சுறுத்தியது. இந்தியாவின் இறுதிக்கட்ட பந்து வீச்சு சொதப்பலாக இருந்தது.

தொடரை வென்று விட்டதால் இனி கடைசி ஆட்டத்தில் நெருக்கடி இல்லை. ஒரு சில மாற்றங்களை செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி துணை கேப்டன் லோகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோருக்கு களம் காண வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

சூப்பர் பார்மில் உள்ள சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்திலும் ஜொலிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். டி20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள்.

தென்ஆப்பிரிக்கவை எடுத்துக் கொண்டால் கடந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர், குயின்டான் டி காக் ஆகியோர் பேட்டிங்கில் கலக்கினர். ஆனால் கேப்டன் பவுமாவின் பேட்டிங் தான் மெச்சும்படி இல்லை. பந்து வீச்சாளர்கள் ரபடா, அன்ரிச் நோர்ஜியா ஆகியோரும் பார்முக்கு திரும்ப வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர். ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும் அவர்களுக்கும் இதுதான் உலக கோப்பை போட்டிக்கு முந்தைய கடைசி டி20 போட்டியாகும்.