Tamilசெய்திகள்

இந்தியா எப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை – பாகிஸ்தான் மறுப்பு

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அதற்கு மறுநாள், இந்திய-பாகிஸ்தான் போர் விமானங்கள் ஒன்றுக்கொன்று சண்டையில் ஈடுபட்டன. அப்போது, இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. அபிநந்தனுக்கு நேற்று முன்தினம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்தநிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், எப்-16 ரக விமானத்தை இந்திய விமானி சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுவதை திட்டவட்டமாக மறுக்கிறோம். எங்கள் விமானம் எதுவும் சுட்டு வீழ்த்தப்படவில்லை. இது அடிப்படையற்றது. எப்-16 ரக போர் விமானங்களை கணக்கெடுத்து, சர்வதேச நிபுணர்களும், அமெரிக்க அதிகாரிகளும் இதை அப்போதே உறுதிப்படுத்தி உள்ளனர். நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் என்று காட்டவே அந்த விமானியை விடுதலை செய்தோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.