Tamilசெய்திகள்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவ இதுவே காரணம்

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கு உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானின் பிஏ.2 வகையில் 3 புதிய திரிபுகளே காரணம் என தெரிய வந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 3-ம் அலைக்கு காரணமான பிஏ.2 வகை ஒமைக்ரானால் தொற்று பாதிப்புகள் அதிகரித்திருந்தது. எனினும் இந்த வகை தொற்றுகள் பெரிய வீரியமாக இல்லாத நிலையில் பரவல் வேகம் குறுகிய காலத்தில் ஏற்றம் அடைந்து அதே வேகத்தில் சரிவை கண்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து இன்சகாக் எனப்படும் இந்திய கொரோனா மரபணு பரிசோதனை அமைப்பின் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.

குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் இருந்து மாதிரிகளை ஆய்வு செய்தனர். இதில் ஒமைக்ரானின் பிஏ.2 வகையில் மட்டும் புதிதாக பிஏ.2.74, பிஏ.2.75 மற்றும் பிஏ.2.76 வகை திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 10 நாட்களில் மட்டும் பிஏ.2.76 வகை திரிபால் 298 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதே போல பிஏ.2.74 வகை திரிபுகளால் 216 பேரும், பிஏ.2.75 வகை திரிபுகளால் 46 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் பிஏ.2.75 வகை திரிபுகள் அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பானில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.