Tamilசெய்திகள்

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் என்ற தகவல் பொய்யானது – மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

மும்பையின் பிரஹன்மும்பை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா வைரசின் புதிய எக்ஸ்இ வகை மாறுபாடு ஒரு நோயாளியிடம் கண்டறியப்பட்டுள்ளது என இன்று தெரிவித்தது.

இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஒருவருக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்திருந்தது.

சீனாவில் பரவி வரும் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எக்ஸ்இ வகை மாறுபாடு என்று கூறப்படும் மாதிரி, மரபணு நிபுணர்களால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த மாறுபாட்டின் மரபணு அமைப்பு எக்ஸ்இ வகை மாறுபாட்டின் மரபணு படத்துடன் தொடர்புபடுத்தவில்லை என நிபுணர்கள் ஊகித்துள்ளனர்.

தற்போதைய சான்றுகள் இது கொரோனா வைரசின் எக்ஸ்இ வகை மாறுபாடு என காட்டவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.