Tamilசெய்திகள்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைந்து வருகிறது – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4 லட்சம் என்ற உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,76,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,57,72,400 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 3,874 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,87,122 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய நாளைவிட உயிரிழப்பு குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,23,55,440 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,69,077 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.11 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 86.74 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31.29 லட்சமாக குறைந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 31,29,878 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 18,70,09,792 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.