Tamilசெய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,288 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு ஏற்ற, இறக்கமாக உள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 7-ந்தேதி பாதிப்பு 3,805 ஆக இருந்தது. மறுநாள் 3,451, நேற்று 3,207 ஆக சரிந்த நிலையில், புதிய பாதிப்பு 3-வது நாளாக குறைந்துள்ளது.

டெல்லியில் நேற்று முன்தினம் பாதிப்பு 1,422 ஆக இருந்த நிலையில் நேற்று 799 ஆக குறைந்தது. அரியானாவில் 371, கேரளாவில் 324, உத்தர பிரதேசத்தில் 218, மகாராஷ்டிராவில் 121, ராஜஸ்தானில் 102 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 7 ஆயிரத்து 689 ஆக உயர்ந்தது.

கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 6 மரணங்கள் மற்றும் நேற்று டெல்லியில் 3, கர்நாடகாவில் ஒருவர் என மேலும் 10 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை தொற்று பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,103 ஆக உயர்ந்தது.

கொரோனா புதிய பாதிப்பை விட அதன் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நேற்று அதிகமாக இருந்தது. அந்தவகையில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 3,044 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.

இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 63 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 19,637 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 766 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 190 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 13,90,912 டோஸ்கள் அடங்கும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 84.15 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,84,843 மாதிரிகள் அடங்கும்.