Tamilசெய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 7240 பேர் கொரோனாவால் பாதிப்பு!

மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு நேற்று 5 ஆயிரத்தை தாண்டி இருந்தது. நேற்று 5,233 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று புதிய பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த மார்ச் 2-ந்தேதி பாதிப்பு 7,554 ஆக இருந்தது. அதன்பிறகு தற்போது பாதிப்பு மீண்டும் 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு சுமார் 4 மாதங்களுக்கு பிறகு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 2,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று முன்தினம் 1,881 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், புதிய பாதிப்பு 42 சதவீதம் அதிகரித்துள்ளது.

தலைநகர் மும்பையில் மட்டும் 1,765 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது கடந்த 133 நாட்களில் இல்லாத அளவில் அதிகம் ஆகும். கேரளாவில் புதிய பாதிப்பு 1,494-ல் இருந்து 2,271 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர டெல்லியில் 564, கர்நாடகாவில் 376, அரியானாவில் 247, தமிழ்நாட்டில் 195, உத்தரபிரதேசத்தில் 163 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 97 ஆயிரத்து 522 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 3,591 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரத்து 301 ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி 32,498 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 3,641 அதிகம் ஆகும். அதிகபட்சமாக கேரளாவில் 11,263, மகாராஷ்டிராவில் 9,806 பேர் அடங்குவர். கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 6 மரணங்கள், டெல்லி, சத்தீஸ்கரில் நேற்று தலா ஒருவர் என மேலும் 8 பேர் இறந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 5,24,723 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 194 கோடியே 59 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 15,43,748 டோஸ்கள் அடங்கும். இதுவரை 85.38 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் நேற்று 3,40,615 மாதிரிகள் அடங்கும்.