இந்தியாவில் இன்று புதிதாக 3,993 பேருக்கு கொரோனா பாதிப்பு!

 

இந்தியாவில் கொரோனா 3-ம் அலை முடிவுக்கு வந்த நிலையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 9-ந் தேதி நிலவரப்படி ஒரு நாள் பாதிப்பு 3 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.

அதன்பிறகு நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து செப்டம்பரில் உச்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக சரிந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மத்தியில் 2-ம் அலை பரவத் தொடங்கியது.

இந்நிலையில் 22 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்தள்ளது.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 71 ஆயிரத்து 308 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 108 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 83 பேர் அடங்குவர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,15,210 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 6 ஆயிரத்து 150 ஆக உயர்ந்தள்ளது. இதில் நேற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 8,055 பேர் அடங்குவார்கள்.

தற்போது 49,948 பேர் தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 4,170 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 21,34,463 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 179 கோடியே 13 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 8,73,395 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 77.43 கோடியாக உயர்ந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools