Tamilசெய்திகள்

இந்தியாவில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவில் இன்று 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,233 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

கடந்த மார்ச் 6-ந்தேதி பாதிப்பு 5,476 ஆக இருந்தது. அதன்பிறகு 3 மாதங்களுக்கு பிறகு தற்போது பாதிப்பு மீண்டும் 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று பாதிப்பு 3,714 ஆக இருந்த நிலையில் இன்று இந்த அளவு உயர்வதற்கு மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்ததே முக்கிய காரணமாக உள்ளது.மகாராஷ்டிராவில் புதிதாக 1,881 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக மும்பையில் மட்டும் 1,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று முன்தினம் 676 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 83 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பையில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் நவி மும்பை, புனே உள்ளிட்ட இடங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கேரளாவில் புதிதாக 1,494 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.

அதன்பிறகு தொடர்ந்து 7 நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுதவிர டெல்லியில் 450, கர்நாடகாவில் 348, அரியானாவில் 227, தமிழ்நாட்டில் 144, உத்தரபிரதேசத்தில் 127 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து 3,345 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 36 ஆயிரத்து 710 ஆக உயர்ந்தது. தற்போது 28,857 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,881 அதிகம் ஆகும். கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 5 மரணங்கள், டெல்லி, உத்தரபிரதேசத்தில் நேற்று தலா ஒருவர் என மேலும் 7 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,24,715 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 14,94,086 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 194 கோடியே 43 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 3,13,361 மாதிரிகளும், இதுவரை 85.35 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.