இந்தியர்களில் 74.1 சதவீதம் பேரால் ஆரோக்கியமான உணவை பெற முடியவில்லை – ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கம், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agricultural Organization). உலக நாடுகள் முழுவதும் பசியை ஒழிக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உணவு பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் 194 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்துள்ளது. இதன் தலைமையகம், இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ளது.

உலகளவில் 130 நாடுகளில் இந்த அமைப்பிற்கு அலுவலகங்கள் உள்ளன. சமீபத்தில் இந்த அமைப்பு ஆசிய நாடுகளில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. தற்போது அந்த ஆய்வின் முடிவுகள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2021ல் இந்தியர்களில் 74.1 சதவீதம் பேரால் ஆரோக்கியமான, சமச்சீரான உணவை பெற முடிவதில்லை என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2020ல் இந்த விகிதாசாரம் 76.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா கால ஊரடங்கிற்கு பிறகு முழுவதுமாக பொருளாதாரம் சீராகாததாலும், அதிகரிக்கும் உணவு பண்டங்களின் விலை மற்றும் எகிறும் விலைவாசிக்கு ஏற்றவாறு மக்களுக்கு ஊதிய உயர்வு இல்லாததும்தான் இதற்கு காரணம் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஊதியத்திற்கும் மக்களின் வாங்கும் சக்திக்கும் இடையே இடைவெளி அதிகரித்தால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் சத்தான உணவின்றி வாடும் சூழ்நிலை அதிகரிக்கலாம் என்றும் ஆரோக்கியமான உணவு எட்டாக்கனியாகலாம் என்றும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news