Tamilசினிமா

‘இந்தியன் 2’ பட பிரச்சனை தீர்ந்தது – இயக்குநர் ஷங்கர் மீதான வழக்குகள் வாபஸ்

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படம் தொடர்ந்து தடங்கல்களை சந்தித்து முடங்கி உள்ளது. ஆரம்பத்தில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். பின்னர் படப்பிடிப்பு அரங்கில் நிகழ்ந்த விபத்தும், உயிர்ப்பலியும் பட வேலைகளை முடக்கியது.

கமல்ஹாசன் தேர்தல் பணிகளை முடித்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கவும், கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடிக்கவும் சென்றுவிட்டனர்.

இந்தியன்-2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்குமாறு தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றும் தடை கிடைக்கவில்லை. இந்த பிரச்சினைகளால் இந்தியன்-2 படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும்? படம் கைவிடப்படுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் இந்தியன்-2 பட தயாரிப்பு நிறுவனத்தினரை இயக்குனர் ஷங்கர் நேரில் சந்தித்து பேசி ராம்சரண் படத்தை முடித்ததும், இந்தியன்-2 படப்பிடிப்பை தொடங்குவதாக உறுதி அளித்துள்ளார். பட நிறுவனமும் அதை ஏற்று வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்து உள்ளதாகவும், இதன் மூலம் இந்தியன்-2 பட சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.