Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஆரோன்பிஞ்ச். அந்நாட்டு 20 ஓவர் அணியின் கேப்டனாக அவர் இருக்கிறார். இந்த நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆரோன் பிஞ்ச் நேற்று அறிவித்தார். அவரது இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சொந்த மண்ணில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தோற்று ஏமாற்றம் அளித்தது. ஓய்வு தொடர்பாக ஆரோன்பிஞ்ச் கூறியதாவது:-

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அடுத்த 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாட மாட்டேன். இதை உணர்ந்துதான் ஓய்வு முடிவை எடுத்தேன். கேப்டன் பதவியில் இருந்து செல்வதற்கு இதுவே சரியான தருணம். சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நான் நன்றியை தெரிவிக்கிறேன்.

36 வயதான ஆரோன்பிஞ்ச் 76 இருபது ஓவர் போட்டிக்கு கேப்டனாக இருந்து உலக சாதனை படைத்துள்ளார். 103 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 3,120 ரன் எடுத்துள்ளார். 2 சதமும், 19 அரை சதமும் அத்துள்ளார். அதிகபட்சம் 172 ரன் குவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் கடைசியாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். 146 ஒருநாள் ஆட்டத்தில் 5,406 ரன் எடுத்துள்ளார். இதில் 17 சதமும், 30 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 153 ரன்கள் குவித்துள்ளார். 5 டெஸ்டில் மட்டும் விளையாடி இருக்கிறார். 20 ஓவர் போட்டியில் 40 வெற்றியை கேப்டன் பதவியில் பெற்றுக் கொடுத்துள்ளார்.

32 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 3 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டையில் முடிந்தது. 55 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்து 31-ல் வெற்றி பெற்றார். 24 ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது. 20 ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலியா 2021-ம் ஆண்டு கைப்பற்றியது. ஆரோஞ்ச் பிஞ்ச் தலைமையில் தான் உலக கோப்பை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.