Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ் – 2வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 151/5

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்னில் போல்டானார். அலெக்ஸ் கேரி 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதல் சீரான இடைவெளியில் இந்தியாவின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ரோகித் சர்மா 15 ரன்னும், சுப்மான் கில் 13 ரன்னும், புஜாரா- விராட் கோலி தலா 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து இறங்கிய ஜடேஜா, ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்தியா 31 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 121 ரன்களை எடுத்தது. 5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 ரன்களை கடந்தது.

ரகானே 29 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஜடேஜா 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஸ்ரீகர் பரத் களமிறங்கினார். 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

இந்நிலையில், இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 38 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பில் 151 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், போலண்ட், கிரீன், ஸ்டார்க், நாதன் லியோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.