Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி – இந்தியா வெற்றி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்தியாவின் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடியதால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் தவான் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி மீண்டும் ஒரு அரைசதம் அடித்தார். அவர் 78 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் (7), மணிஷ் பாண்டே (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 80 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, 341 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் இறங்கினர்.

வார்னர் 13 ரன்னிலும், பின்ச் 33 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய ஸ்மித், லாபுஷேன் இருவரும் பொறுப்புடன் ஆடினர். இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். நிதானமாக ஆடிய ஸ்மித் அரை சதம் கடந்தார். லாபுஷேன் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.

குல்தீப் பந்துவீச்சில் ஒரே ஓவரில் அலெக்ஸ் கேரி மற்றும் சதத்தை நெருங்கிய ஸ்மித்தை 98 ரன்னில் அவுட்டாக்கினார். அடுத்து இறங்கிய வீரர்களை இந்திய பந்து வீச்சாளர்கள் விரைவில் அவுட்டாக்கினர்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவரில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 36 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்தியா சார்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ரவீந்திட ஜடேஜா, ஷைனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *