Tamilவிளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் – இந்திய வீரர் லக்சயா சென் காலியிறுதிக்கு முன்னேற்றம்

 

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்த லக்சயா சென் (வயது 20), கடந்த ஜனவரி மாதம் இந்தியா ஓபன் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல்முறையாக சூப்பர்-500 சாம்பியன் பட்டத்தை வென்றார். கடந்த வாரம் ஜெர்மன் ஓபனில் இறுதிப்போட்டிக்கு
முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் உலகின் மூன்றாம் தரநிலை வீரரான ஆன்டர்ஸ் ஆண்டன்சனை எதிர்கொண்ட லக்சயா சென், 21-16, 21-18 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தார். காலிறுதியில் ஹாங்காங் வீரர் நிக் கா லாங் ஆங்கஸ் அல்லது சீனாவின் லு
குவாங்குடன் லக்சயா சென் மோதுவார்.

முன்னதாக இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியிடம் 14-21 21-17 17-21 என்ற செட்கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.