ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடு – 7 ஆசிரியர்கள் இடைநீக்கம்

ஆந்திர மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி நேற்று ஏழு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு மையத்திற்கு விடைத்தாள் அனுப்பப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததையடுத்து கல்வி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பல ஆசிரியர்களின் செல்போன்களில் தேர்வு தாள்களுக்கான விடைகள் இருந்ததாகவும் இதன் மூலம் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதாகவும்  மாவட்ட கல்வி அதிகாரி தஹேரா சுல்தானா தெரிவித்தார்.

இதையடுத்து  பசுமரு ஜில்லா பரிஷத் பள்ளியைச் சேர்ந்த 6 ஆசிரியர்களும், கனுமோலு ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 42 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தவறு செய்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools