X

ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணி 15 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு – தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஆந்திரா தேர்தல் குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 67 இடங்கள் மட்டுமே கிடைக்கும். தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 இடங்களில் வெற்றி பெறும்.
இதே போல 25 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி 15 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ச்சியான தவறுகளை செய்துள்ளார். முதலில் அவர் தனது அம்மாவையும் சகோதரியையும் பார்த்திருக்க வேண்டும். இருவரும் அவருக்கு எதிராக இருக்கிறார்கள். 2019 தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராகவே நின்றுள்ளனர். அதுவே அவருக்கு ஆபத்தானது.

கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல நடத்தினார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை. மேலும் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு துரோகம் செய்துள்ளார். 2019 தேர்தலில் நாங்கள் உதவி இருக்காவிட்டால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.