Tamilசெய்திகள்

ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளதால், சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே முதல்வர் குறித்து நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் ஆகியோருடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதல்வர் பழனிசாமி நடத்தும் அரசு கூட்டங்களில் பங்கேற்கும் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாவட்ட ஆட்சியாளர்களுடனான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.