Tamilசினிமா

அல்லு அர்ஜுனின் கனவை நிறைவேற்ற வரும் ’புஷ்பா’!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இந்த வருடத்தில் மிக பிரமாண்டமான திரைப்படமாக கொண்டாடப்படும் என்றும், மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் படத்தின் டிரைலர் நிரூபித்துள்ளது.

வரும் டிசம்பர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘புஷ்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகன் அல்லுர் அர்ஜுன், இயக்குநர் சுகுமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர்களுடன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் சிறுத்த சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அல்லு அர்ஜுன், தமிழ் சினிமாவில் ஜெயிப்பது தான் என் கனவு. தமிழ் சினிமாவில் ஜெயித்தால் தான் என் வாழ்வு முழுமை பெறும், என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மன்னிக்கனும் நான் தமிழ் பேசும்போது தமிழ்ல தப்பு இருக்கும் நிறைய வருஷம் ஆச்சு. தமிழ்ல பேசி, ஆனாலும் தமிழில் தான் பேச
போறேன். முதலில் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்து வாழ்த்திய  அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி. மதன் கார்கிக்கு முதலில் மிகப்பெரிய நன்றி. தேவி இந்தப்படத்தை கேட்டு இந்தப்படம் தமிழ் மாதிரியே இருக்கே என்றார். நானே தமிழ் தானே என்றேன். சௌத்திரி சார் வட இந்தியாவில் என்னை பற்றி பேசினார்கள் என்றார், ஆனால் நம்ம ஊரில் நம்மை பேசவில்லையே என ஏக்கம் இருந்தது. அதை இப்படம் போக்கும். இது தமிழில் அப்படியே பொருந்தும். இப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி தந்ததில் மிக முக்கிய பங்காற்றிய மதன் கார்க்கி சாருக்கு நன்றி. சுகுமார் சாருக்கு நன்றி.
நான் ஹீரோவா மாறினது ஆர்யா படத்தில் தான். அப்போதிருந்தே அவரிடம் கேட்டேன், நாம் எப்போது படம் செய்யலாம் என்று, ஆனால் நாம் சேர்ந்தால் நல்ல படமாக இருக்கனும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இந்தப்படம் அந்தளவு ஈஸி இல்லை. புஷ்பா படம் செய்வது, நாலு படத்தை செய்வது போன்றது. ஆனால் சுகுமார் மிக கடுமையாக உழைத்திருக்கிறார். மொத்த குழுவுமே காட்டுக்குள் மிகக்கடினமாக உழைத்திருக்கிறார்கள். தமிழில் ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு. இங்கு பாட்டு ஹிட் ஆனவுடன் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். தமிழில் ஜெயித்தால் தான்  வாழ்வு முழுமையாகும், இங்கிருந்து என்னை பாராட்டினால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். புஷ்பா அதை செய்யும். ஐகான் ஸ்டார் சுகுமார் சார் தான் தந்தார். ஸ்டைலீஷ் ஸ்டார் அவர் தான் தந்தார். நான் வேலை செய்யும் போது யோசிக்கமாட்டேன் அது ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன் அவ்வளவு தான். தமிழில் படம் செய்ய வேண்டும், தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி. இந்தப்படம் சந்தன மரக்கடத்தலின் பின்னணியில் நடக்கும் புஷ்பாவின் கதை, அவ்வளவு தான். இதில் அரசியல் எல்லாம் இல்லை. படம் நல்லா வரணும் என்று நினைத்து  தான் நான் டப்பிங் பேசவில்லை. இந்தப்பட கேரக்டருக்கு மாறியது சவாலாக இருந்தது. லுக் செட் பண்ணவே எங்களுக்கு 4 மாதம் ஆனது. படம் வெளியான பிறகு இன்னும் நிறைய பேசலாம். இந்தப்படத்தில் அத்தனை விசயம் இருக்கிறது. ஷீட்டிங் ஸ்பாட் போகவே 2 மணி நேரம் ஆகும், அங்கு லைட் இருக்காது காட்டுக்குள் நிறைய கஷ்டங்கள் இருக்கும். எல்லாவற்றையும் கடந்து தான் படமாக்கியுள்ளோம். ராஷ்மிகா வித்தியாசமா பண்ணிருக்காங்க, பெரிய பெரிய நட்சத்திரங்கள் வித்தியாசமான லுக்கில் அட்டகாசமா பண்ணிருக்காங்க. முக்கியமா பகத் பாசில் நடிப்பதை பார்த்து ரசித்தேன். தமிழில் படம் ஓடினா என் வாழ்க்கை கம்ப்ளீட் ஆகும், நீங்கள் அனைவரும் கொண்டாடும் படமாக இது இருக்கும்.” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி மலையாளம், வட இந்தியாவிலும் மிகப்பெரிய வியாபாரம் உள்ளது. தமிழிலும் அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார், என்று வாழ்த்தியதோடு, தமிழில் அவர் பல படங்களில் நடிக்க வேண்டும், என்றும் கூறினார்கள்.