Tamilசெய்திகள்

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நடிகை மரணம் – மருத்துவமனை மீது போலீஸ் வழக்குப் பதிவு

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் வரதராஜ் என்பவரது மகள் சேத்தனா ராஜ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் உடல் கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நடிகை சேத்தனா ராஜிற்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் தமது மகள் உயிரிழந்ததாக நடிகையின் பெற்றோர் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். அறுவை சிகிச்சை வேண்டாம் என்று என் மகளிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் தமக்கு தெரியாமல் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார் என அவரது தந்தை வரதராஜ் குறிப்பிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையின் போது தமது மகளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதாக  மருத்துவமனை ஊழியர்கள் என் மனைவியிடம் தெரிவித்தனர். நாங்கள் அவளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினோம், அங்கு அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என வரதராஜ் தெரிவித்துள்ளார்.

போதுமான உபகரணங்களின்றி அறுவை சிகிச்சை செய்ததால், என் மகள் உயிரிழந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

22 வயதான நடிகை சேத்தனாராஜ்  கீதா, தொரசானி, ஒலவின நில்தானா உள்ளிட்ட கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். மேலும்  ஹவயாமி என்ற கன்னட சினிமாவிலும் நடித்துள்ளார்.