Tamilவிளையாட்டு

அர்ஜெண்டினா அணிக்காக 100 கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்சி

கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் பிரான்சை வீழ்த்தியது. இதன் மூலம் மெஸ்சிதான் உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்பதை நிரூபித்தார்.

உலக சாம்பியனான அர்ஜென்டினா-குராக்கோ அணிகள் மோதிய நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது. இதில் அர்ஜென்டினா 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சி 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். அவர் 20, 33 மற்றும் 37-வது நிமிடங்களில் கோல் அடித்தார். நிக்கோலஸ் கோனல்ஸ், என்சோ பெர்னாண்டஸ், டிமரியா கோன்சாலோ மாண்டியல் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

மெஸ்சி முதல் கோலை அடித்த போது சர்வதேச போட்டியில் 100 கோல்களை தொட்டார். அவர் அர்ஜென்டினா அணிக்காக 174 போட்டியில் விளையாடி 102 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டியில் 100 கோல்களை அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெற்றார். போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 198 போட்டியில் விளையாடி 122 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ஈரான் நாட்டை சேர்ந்தவரான அலிடாய் 148 ஆட்டத்தில் 109 கோல்கள் அடித்து 2-வது இடத்தில் இருக்கிறார்.