X

அரசு மூலம் இணையதள முடக்கம் அதிகம் ஏற்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்

நாட்டில் உள்ள பகுதிகளில் திடீர் கிளர்ச்சிகள், கலவரங்கள்,வன்முறைகள் ஏற்பட்டால் அது மேலும் வலுவடையாமல் இருக்கவும், மக்களுக்கு மத்தியில் அதைப் பற்றிய செய்திகள் பரவாமல் இருக்கவும் அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்துக்களும் செய்திகளும் வேகமாக உடனுக்குடன் அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.

அவசர நிலை ஏற்படும் சமயங்களில் இணையதளம் முடக்கப்படுவதே அரசுகளின் முதல் நடவைடிக்கையாக இருக்கும். இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரம், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் இணையதள முடக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் சர்வதேச அளவில் நடந்த ஆய்வின் படி தொடர்ந்து 6 வது வருடமாக 2023 ஆம் ஆண்டு இணையதள முடக்கம் அதிகம் ஏற்பட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அறிக்கையின்படி, இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 116 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற மணிப்பூர் இனக் கலவரத்தின் போது அதிகப்படியாக 47 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து ஜம்மு காஸ்மிரில் 17 முறையும், பிகாரில் 12 முறையும், ஹரியானாவில் 11 முறையும், மேற்கு வங்கத்தில் 6 முறையும், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் 5 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

உலகளவில் இந்த பட்டியலில் ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் 37 முறை இணைய முடக்கத்துடன் 2 ஆவது இடத்தில உள்ளது. அதைத்தொடர்ந்து, ஈரானில் 34 முறையும் , பாலஸ்தீனத்தில் 16 முறையும், உக்ரைனில் 8 முறையும், பாகிஸ்தானில் 7 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.