Tamilசினிமா

அரசியல் கட்சி தொடங்கினால் ‘புதிய பாதை’ என்று பெயர் வைப்பேன் – பார்த்திபன் அறிவிப்பு

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் பார்த்திபன். கடந்தாண்டு அவர் மட்டும் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்தினார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகிறது.

அந்தவகையில், அண்மையில் புதுவை அரசு ஒத்த செருப்பு படத்துக்கு விருது வழங்கியது. அப்போது பேசிய பார்த்திபன், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என கூறியுள்ள அவர், தான் அரசியல் கட்சி தொடங்கினால் புதிய பாதை என பெயர் வைப்பேன் என தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் இயக்கி நடித்த முதல் படம் புதிய பாதை. 1989-ல் திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய 2 தேசிய விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.