X

அரசியலமைப்பு மீது அன்பை வெளிப்படுத்த எந்தவித உரிமையும் இல்லை – காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடி

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவசரநிலை அமலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை சுட்டிக்காட்டி விமர்சித்தார். மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்களை அல்ல என்று எதிர்க்கட்சிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்தார். “50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்து விட்டீர்கள். நாங்கள் மக்களுக்காக பாராளுமன்றத்திலும், தெருக்களிலும் அனைவருக்கும் முன்பாக குரல் எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்”என்றார்.

இந்த நிலையில் அரசியலமைப்பு சட்டத்தை அடியோடு தகர்த்து நாட்டை சிறைக்குள் அடைத்த நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்து இன்றுடன் 50 ஆண்டுகளாகும் நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் இது தொடர்பாக கூறியதாவது:-

அவசர நிலையை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்றாகும். அவசர நிலையில் இருட்டு நாட்கள் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் எப்படி எதிர்த்தது என்பதை நினைவூட்டுகிறது.

ஆட்சியை பிடிக்க அன்றைய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு ஜனநாயக கொள்கையையும் புறக்கணித்து தேசத்தை சிறைக்குள் அடைத்தது. காங்கிரசுக்கு உடன்படாத அனைவரும் சித்ரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். நலிந்த பிரிவினரை குறி வைத்து சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

எமர்ஜென்சியை கொண்டு வந்தவர்கள் நமது அரசியலமைப்பு மீது அன்பை வெளிப்படுத்த எந்தவித உரிமையும் இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் 356-வது சட்டப் பிரிவை திணித்தவர்கள். பத்திரிகை சுதந்திரத்தை அழிக்கும் மசோதாக்களை கொண்டு வந்தவர்கள். கூட்டாட்சி முறையை அழித்தவர்கள். அரசியல மைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறியவர்கள். அவர்களின் செயல்களை இந்திய மக்கள் பார்த்ததால் தான் மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக சாடியுள்ளார்.