Tamilசெய்திகள்

அரசாங்க மின்னணு சந்தை தளத்தில் பொருட்கள் கொள்முதல் செய்ய கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுமதி

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ‘கவர்ன்மெண்ட் இ-மார்க்கெட்பிளேஸ்’ (ஜி.இ.எம்.) எனப்படும் அரசாங்க மின்னணு சந்தை தளத்தில் பொருட்களை கொள்முதல் செய்ய கூட்டுறவு அமைப்புகளையும் அனுமதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்ட இந்த மின்னணு தளத்தில் மத்திய- மாநில அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை தற்போது கொள்முதல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.  இதனால் தனியார் துறையினர் அரசு மின்னணு தளத்தில் இனி கொள்முதல் செய்ய இயலாது.

தற்போது கூட்டுறவு அமைப்புகளை அனுமதித்திருப்பதன் மூலம் 8.54 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு அமைப்புகளும் அதில் உள்ள 27 கோடி உறுப்பினர்களும் பயனடைவார்கள்.

மேலும் ஜிஇஎம் மின்னணு தளம் மூலம், கூட்டுறவு உறுப்பினர்களால் உரிய விலையில் பொருள்களைப் பெற முடியும். இந்த நடவடிக்கை பொருளாதார ரீதியாகப் பலனளிப்பது மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஇஎம் வலைதளத்தில் சோ்க்கப்பட உள்ள கூட்டுறவு சங்கங்களின் பட்டியலை மத்திய கூட்டுறவு அமைச்சகம் முடிவு செய்யும் என்றும்  கூறப்பட்டுள்ளது.