Tamilசெய்திகள்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது.

அப்போது தேர்தலில் தோல்வியடைந்த தற்போதைய அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து கடும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிபர் டிரம்பின் பதவி காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் நாடாளுமன்ற கலவரத்துக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.‌ இதற்காக டொனால்டு டிரம்பை பதவி நீக்க வகைசெய்யும் தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டன.

இதற்காக, பிரிதிநிதிகள் சபையில் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை ஜனநாயக கட்சிகள் மேற்கொண்டன.

இந்நிலையில், டிரம்பை பதவி நீக்குவதற்கான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் 222 ஜனநாயக கட்சி உறுப்பினர்களும், 10 குடியரசு கட்சி உறுப்பினர்களும் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர்.

இதன் மூலம் இரண்டாவது முறையாக பதவிநீக்க நடைமுறைகளை அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்கொள்கிறார்.

தகுதி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால், செனட் அவையில் டிரம்ப் மீது விசாரணை நடக்கும். செனட்டில் அவர் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டும்.

குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில்
இருந்து நீக்கப்படுவார். அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.